திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

16 ஏப்., 2009

இலங்கைக்கு இறுதி எச்சரிக்கை: ராமதாஸ் கோரிக்கை


சென்னை : "இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி எதையும் துறக்கவேண்டாம்; அவர்களைக் காப்போம் என்று தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை:இலங்கையில் எது நடந்துவிடக்கூடாது என்று அஞ்சினாமோ அந்த கொடுமை சிங்கள இனவெறி போர்ப்படையினரால் அரங்கேறி வருகிறது. போர் முனையில் நேருக்கு நேர் மோதும் போராளிகளை வெல்ல முடியாமல் திணறுகின்ற சிங்கள படையினர், பாதுகாப்பு வளையங்களில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள அக்னி குண்டுகளை வீசி, இதுவரை நடந்திராத அளவில் இன ஒழிப்பை நடத்துகின்றனர். உலகில் எங்கெங்கோ நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் நாள்தோறும் தமிழினத்தைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக இதுவரை ஒரு முறை கூட உரக்க எச்சரிக்கை விடவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் தமிழக மக்களுக்கு இருக்கிறது. இலங்கை தமிழர்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய கடமைப்பொறுப்பும், பன்னாட்டு சட்டத்தின்கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், சட்டத்தகுதியும் உள்ள இந்தியா, இந்த கடைசி நிமிடத்திலாவது தலையிட்டு போரை நிறுத்தி, அங்கே நடக்கும் தமிழின பேரழிவை தடுத்து நிறுத்தவேண்டும். வெறும் 48 மணி நேரம் போர்நிறுத்தம் என்ற ஏமாற்று வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டபோது, அது எங்களால் தான் வந்தது மார்தட்டியவர்களுக்கு, இப்போது இலங்கை தமிழர்களை காப்பாற்றினோம் என்ற பெயரெடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அமைச்சர் சிதம்பரமும், மத்திய அரசை செயல்பட வைத்திருக்கிறோம் என்று மார்தட்டும் தி.மு.க., தலைவரும், மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, போரை நிறுத்த இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடவேண்டும். இலங்கை தமிழர்களை காப்பதில் மத்திய அரசு இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த கடைசி சந்தர்ப்பத்தையாவது மத்திய அரசு நழுவ விடக்கூடாது என்று இருவரும் எடுத்துச் சொல்லவேண்டும். இலங்கை தமிழர்களுக்காக எதையும் துறப்போம் என்று பேசியவர் முதல்வர் கருணாநிதி. அவர் எதையும் துறக்கவேண்டாம். இலங்கை தமிழர்களை காப்போம் என்று உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று மத்திய அரசை நோக்கி, இந்த ஆபத்தான நேரத்தில் உரக்க குரல் கொடுத்தால் போதும். தேர்தல் நேரம் என்றதும் இலங்கை தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் விடும் சிதம்பரத்தையும் உங்களோடு துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். போரை நிறுத்துங்கள் அல்லது முன்பு போல விமானப் படையை அனுப்பி தமிழர்களைக் காப்போம் என்று எச்சரிக்கை விடச் செய்யுங்கள். இதை சாதித்தால் வரலாற்றில் பொறிக்கப்படும். இல்லையென்றால் தமிழினம் உங்களை சபிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: