திருக்குறள்

வலைப்பதிவு காப்பகம்

14 ஏப்., 2009

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் ப.சிதம்பரத்திற்கு(காங்கிரஸ்க்கு ) ராமதாஸ் 9 கேள்விகள்



இலங்கை தமிழர் பிரச்சனையில் பாமகவை விமர்சித்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பம். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கைத் தமிழர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய பெற்றோர்கள் என்ற முறையிலும், தமிழர்களின் தொடக்கத் தாயகம் என்பதாலும், இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை பிரதமரிடமும்,

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியிடமும் பா... தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.

நேரில் சந்தித்தும்,கடிதங்கள்வாயிலாகவும்இதனைவற்புறுத்தியிருப்பதுடன்,மக்களவையிலும், பா... உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட பா.ம.க. மீது சிதம்பரம் இப்போது தேர்தலுக்காக வீண் பழி சுமத்த முற்பட்டிருக்கிறார்.

1. இலங்கைத் தமிழர் சிக்கல், கடந்த 4 ஆண்டுகள் 11 மாதங்களில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதப் பொருள்களில் ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறதா? எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால் எந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது? விவாதப் பொருளாக என்ன விவாதிக்கப்பட்டது? அந்த விவாதத்தில் சிதம்பரத்தின் பங்களிப்பு என்ன?



2. இந்தச் சிக்கல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கே ஒருபோதும் வரவில்லை என்றால் ஏன் வரவில்லை?
அமைச்சரவைக் கூட்டத்தில் இதை விவாதப் பொருளாகக் கொண்டு வருவதற்கு பொறுப்பான அமைச்சகம் எது? சம்பந்தப்பட்ட அமைச்சகம் ஏன் அதைச் செய்யத் தவறியது?



3.இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் நேரடியாகத்
தலையிடுவதற்கான உரிமையும், கடமைப் பொறுப்பும், சட்டத் தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த உரிமை எப்போதேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்திலாவது விவாதிக்கப்பட்டிருக்கிறதா?



4. இல்லை என்றால், தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் மூத்த மந்திரியும், நிதித்துறை, உள்துறை போன்ற முதன்மையான
பதவிகளை ஏற்றவரும், அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெற்றவருமான சிதம்பரம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?


5. இலங்கை மீது சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதன் மீது `செல்வாக்கு செலுத்தக்கூடிய ஆற்றல்' இந்தியாவுக்கு இல்லை என்று சிதம்பரம் சொல்லவில்லையா? இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முழுத் தோல்வி என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையா?



6. இந்தக் கொள்கையை வகுத்து, நிர்வகிப்பது யார்? - மத்திய அமைச்சரவையா? வெளியுறவு அமைச்சகமா? அல்லது
குறுகிய கண்ணோட்டம் உடைய, பிறர் மீது நம்பிக்கையற்ற அதிகாரிகளா? மிகவும் மூத்த மந்திரி என்ற முறையில் சிதம்பரம் இதுபற்றி எப்போதாவது கவனம் செலுத்தியது உண்டா?



7. இலங்கைத் தமிழர் சிக்கல், வெகு தொலைவில் உள்ள இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில்
எல்லாம் வாதிட்டு, விவாதிக்கப்படும்போது, அண்டை நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இதை அரசாங்கமோ, காங்கிரஸ் கட்சியோ ஏன் முன்வைத்து விவாதிக்கவில்லை? மக்களவையில் வினா நேரத்துக்குப் பிறகு பா.ம.க. உறுப்பினர்கள் மூலமாக இந்தச் சிக்கல் குறுகிய நேரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் கூட, சிதம்பரம் எங்கே போயிருந்தார்?



8. வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் பாராளுமன்றக் குழு இலங்கைத் தமிழர்களின் மனிதப்பேரழிவு சிக்கல்
குறித்து விசாரிக்கும் போது, இந்தச் சிக்கல் ஏன் ஒரு போதும் இந்திய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்படவில்லை?



9. தொடர்ச்சியாகக் கோரிக்கைகள், மனுக்கள், சட்டப் பேரவைத் தீர்மானங்கள், அனைத்துக் கட்சித் தீர்மானங்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுக்கள், முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக்குழு, இப்படியெல்லாம் முறையிட்டும்கூட, இலங்கைத் தமிழர் சிக்கலில் அக்கறை இல்லாமலும், ஈடுபாடு இல்லாமலும் இந்திய அரசு அமைதியாக இருந்து வருகிறது.


உண்மையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் நடத்திவரும்
இனப்படுகொலைக்கும், இனவெறிப்போருக்கும் இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.


இலங்கைப் படைகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்தல், போர்க் கருவிகள் வழங்கிப் பராமரித்தல், ரேடார் இயக்குதல், விமானம் மூலம் வேவு பார்த்துக் கண்காணித்தல், உளவுத் தகவல்களை வழங்குதல், கடற்படை மூலம் முற்றுகை முதலியவை அதில் அடங்கும். இந்திய அரசு இவை எதையும் மறுக்கவில்லை. இதுபற்றி சிதம்பரம் என்ன சொல்கிறார்?


இப்படியெல்லாம் சிதம்பரத்தை(காங்கிரஸ்) நோக்கி எண்ணற்ற கேள்விகளை எழுப்ப முடியும். இவற்றுக்கெல்லாம் சிதம்பரம் என்ன
பதிலளிக்க முடியும்’’ என்று கேள்விகள் எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: