உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.
அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் அரசியலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்வதிலிருந்து……. சர்வதேச அரசியலின் ஆணிவேரையும் அடையாளம் காட்டியிருக்கிறது அவனது மரண சாசனம். இது இந்த நூற்றாண்டின் மக்களுக்கான இலக்கியமாக என்றென்றும் வீற்றிருக்கும்.
“வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை…….” எனத் தொடங்கும் அந்தத் தோழனின் மடல் தமிழக - இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் யோக்யதை……. தமிழக மாணவர்களது போராட்ட உணர்வு……. காவல்துறையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நேர்மையாளர்களும் மக்களுக்காகப் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியம்……. காலத்தின் கட்டாயமாகிப் போன ஈழத்தின் விடியல்……. என எண்ணற்ற திசைகளில் பயணிக்கிறது அக்காவியம். அத்தோடு நில்லாமல் முத்துக்குமார் தான் நேசிக்கும் சர்வதேச சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வினா……. அறிவு நாணயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் வினா.
அதை அத்தோழனது வரிகளிலேயே சொல்வதானால்……. ” வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?” முத்துக்குமாரின் வரிகளில் உள்ள சர்வதேச அரசியல் பார்வையையும்……. சர்வதேச சமூகத்தின் சகிக்கமுடியாத மெளனம் குறித்த கவலையையும்……. வாசிக்க வாசிக்கவே……. இத்துணை அற்புதமான தோழனை இழந்திருக்கிறோமே எனக் கண்ணீர் விட்டு அழுதேன். ஒருமுறை அல்ல. பலமுறை.
தான் வெறுமனே தமிழ் வெறியனல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஓருயிர் என்பதை உணர்த்தும் விதமாய்…….” படுகொலை செய்யப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தாவின் சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…….
தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்…….” என்கிற வரிகளை வாசிக்கும்போது விண்ணுக்கும் மேலாய் உயர்ந்து நிற்கிறான் அம்மானுடன்.
“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்கிற தம்பியின் வேண்டுகோளை ஏற்று……. போலீசை மட்டுமல்ல……. ஓட்டுப் பொறுக்கிகளையும் ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.
காங்கிரசின் கிளைக் கழகமாகிப் போன தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுக்கு உதை…….
போயஸ் தோட்டத்தில் “போர்த்தந்திரம்” வகுக்கும் வை.கோவிடம் “ஜெ.கிட்டே இருந்து வெளீல வந்துட்டு ஈழத்தைப் பத்திப் பேசு” என்கிற எச்சரிக்கை…….
என ஓட்டுத் தலைவர்கள் எவரும் தப்பவில்லை இந்த இளைஞர்களிடம். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தித் திணிப்பிற்கெதிரான மாணவர்களது மொழி உணர்வுகளை தங்களுக்காக அறுவடை செய்து கொண்ட தி.மு.க.வினருக்குத் தெரியாதா……. எதை எப்படிச் சமாளிப்பதென்று? அதுவும் அப்படியே செய்தது…….. கல்லூரிகள் அனைத்தையும் இழுத்து மூடி, மாணவர்களை வெளியேற்றியது. ஆனால் அதையும் உடைத்தெறிந்து இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது மாணவர்களது யுத்தம்.
காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பகதவச்சலம் மாணவர்களை ஒடுக்க எதை எதையெல்லாம் செய்தாரோ……. அவைகளை அச்சு பிசகாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் “வாழும் பக்தவச்சலமான” முத்தமிழறிஞர்.
இந்த லட்சணத்தில் இருக்கின்ற அமைப்புகள் போதாதென்று “இலங்கை தமிழர் நல உரிமை பேரவை” என்று இன்னொரு புது அமைப்பு வேறு. பெரியாருக்கு ஆப்படிக்கும்போது “தலைவர்” பதவியைக் காலியாக விட்ட மாதிரி…….
இந்த அமைப்புக்கும் இப்போது “தலைவர்” கிடையாதாம்…….
அதன் துணைக் குழுவுக்கு அமைப்பாளராக துரைமுருகனாம்…….
செயலாளர்களில் ஒருவராக இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழாயான கி.வீரமணியாம்…….
இப்படி நகர்கிறது இவர்களது நகைச்சுவை நாடகம். இதற்கு பதிலாக…….
தலைவராக “வழக்கம்போல்” கலைஞரும்…….
பொதுச் செயலாளராக ராஜபக்சேவும்…….
பொருளாளராக சோனியாவும்…….
செயலராக ஜெயலலிதாவையும்…….
துணைச் செயலாளராக சுப்ரமண்யன்சாமியையும்…….
சேர்த்துப் போட்டிருக்கலாம்.
கிழிஞ்சது கிருஷ்ணகிரி.
கொஞ்ச காலம் முன்பு வட மாநிலத் தொலைக்காட்சி ஒன்று “கருணாநிதி” என்பதற்குப் பதிலாக “கருணா” என்று அழைத்ததைக் கண்டு கடும்கோபமும்……. எரிச்சலும் கொண்டேன்.
ஆனால்…….
நடந்து வரும் நாடகங்களயும்…….
நயவஞ்சகங்களையும்……. பார்க்கும்போது…….
ஈழத்துக் “கருணா”விடம் இருந்து மட்டுமில்லை…….
இந்தியக் “கருணா”க்களிடம் இருந்தும்
ஈழப்பிரச்சனையை மீட்டால்தான்
தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட
தம்பி முத்துக்குமாரின் கனவு நனவாகும்
என்பது மட்டும் உறுதி.
நன்றி :திரு .பாமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக